ARTICLE AD BOX
பிரம்மாண்ட பட்ஜெட்டில் STR 50
“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிலம்பரசன் தனது 49 ஆவது திரைப்படமாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கியதால் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.
இந்த நிலையில் சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படமே சிம்புவின் 49 ஆவது திரைப்படம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக இந்த பிராஜெக்ட் பிக்கப் ஆகவே இல்லை. முதலில் கமல்ஹாசன் இத்திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. அதன் பின் சிம்புவே தனது சொந்த பேன்னரில் இத்திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சிம்புவின் 50 ஆவது திரைப்படமாக இது உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என கூறப்படுகிறது. இது ஒரு வரலாற்று ஃபேன்டசி திரைப்படம் எனவும் இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் கூறுகின்றன.
வெங்கட் பிரபுவுடன் இணையும் சிம்பு
இந்த நிலையில் சிம்பு தனது 50 ஆவது திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக நேற்று ஒரு தகவல் வெளிவந்தது. இதன் மூலம் தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று புதிதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக நடிகர் மணிகண்டனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இத்தகவல் அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் சிம்பு வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக வெளிவந்த தகவலை ஒப்பிட்டு பார்க்கும்போது தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக மணிகண்டனை வைத்து படம் இயக்கவுள்ளது உண்மைக்கு நெருக்கமான தகவலாகவே இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். இதன் மூலம் தேசிங்கு பெரியசாமி-சிம்பு கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட திரைப்படம் நடக்குமா? நடக்காதா? என கேள்வி எழுந்துள்ளது.