ARTICLE AD BOX
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அத்திரைப்படத்தின் வருகைக்காக கொண்டாட்டங்களுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படம் நிச்சயம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்தில் பணியாற்றியது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பயம்தான் அதிகமா இருந்தது
“அஜித்சாருக்கு கதை சொல்லப்போகும்போது, சார் இந்த கதைக்கு ஓகே சொல்வாரா என்ற பயம் அதிகம் இருந்தது. அஜித் சார் ஓகே சொன்ன பிறகு நன்றாக படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற பயம் இருந்தது. பயம்தான் அதிகமாக இருந்தது. அஜித் சாரை வைத்து படம் இயக்கப்போகும் சந்தோஷத்தை விட பயம்தான் அதிகமாக இருந்தது. செயல்முறையை நான் மகிழ்ச்சியோடு செய்தேன், ஆனால் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் சரியாக செய்துவிட வேண்டும் என்ற பயத்துடன் தான் ஒவ்வொரு நாளையும் கடந்தோம்” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.