ARTICLE AD BOX
சென்னையில், வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக 21 லட்சம் கமிஷம் பெற்று ஏமாற்றியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் (48). இவர் நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் தரகராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஆரோக்கிய அலோசியஸ் (38) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என அலோசியஸ் கூறியுள்ளார். இதனை நம்பிய ஈஸ்வர், அவருக்கு பல தவணைகளாக 8.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர், ஆரோக்கிய அலோசியஸ், புழல் எம்.எம்.பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற மாலதி (38) மற்றும் செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த கனகராஜ் (39) ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, கல்பனா, தனியார் வங்கி ஒன்றில் உள்ள அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்றும், அவர்கள் மூலம்தன்னால் ரூ.5 கோடி வரை கடன் பெற்றுத்தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஈஸ்வர், கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கிலும் என மொத்தம் ரூ.21 லட்சத்தை கமிஷனாக கொடுத்துள்ளார்.
ஆனால், சொன்னபடி ரூ.5 கோடி கடன் பெற்றுக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஈஸ்வர், இது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: ஓரங்கட்டியவர்களை இழுக்கும் திமுக.. தவெக உட்கட்டமைப்பால் விறுவிறுப்பா?
இந்த விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகினார். இதனையடுத்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தலைமறைவாக இருந்த ஆரோக்கிய அலோசியஸ், கல்பனா மற்றும் கனகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.