ARTICLE AD BOX
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல போராட்டங்களை தனித்துதான் செய்து இருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுதுதான் பேசுகிறார்கள்.
இந்தக் கருத்தை 2003ஆம் ஆண்டிலேயே அறிக்கை விட்டு, இந்தக் கருத்திற்கு எதிராகப் பேசி இருக்கிறேன். கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்பப் போவதில்லை. நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம் இது. அதனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், காளியம்மாள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “காளியம்மாள் எங்கே போகிறார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்” என பதிலளித்தார்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளராக இருந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, நேற்று ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் நாதகவில் இருந்து விலகினார். அன்றுதான், சீமானும் ராணிப்பேட்டை செல்ல இருந்தார்.
ஏற்கனவே, சீமானின் கட்சியில் இருந்து மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது கட்சியினுள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ‘போனால் போகட்டும்’ என்ற சீமானின் பதிலும், கட்சியினர் மத்தியில் சற்று சலசலப்பை உண்டாக்கி, நாதகவின் போக்கை கவனிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பிரபல நாளிதழிடம் பேசிய நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை ஜெயசீலன், “நாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்கிறோம். இந்தப் புள்ளியில் நாங்கள் திராவிடம், தேசிய சித்தாந்தம் இரண்டுடனும் அடிப்படையில் நாம் வேறுபடுகிறோம். விஜயும் திராவிட பிதாமகரான பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!
அதனால்தான் நாங்கள் விஜயை எதிர்க்கிறோம். இப்படி ஒரே நேரத்தில் திராவிடத்தையும், தேசியத்தையும் எதிர்ப்பதால், அனைவரையும் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். எல்லா கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பிரிவது காலம் காலமாக நடப்பதுதான்.
அதுபோலவே நாதகவிலும் நடக்கிறது. வளரும் அரசியல் அமைப்பில் புதிய செயல்திட்டங்களை அமல்படுத்தும்போது சிலர் கருத்து முரண்பாட்டால் விலகுவது தவிர்க்க முடியாதது. கட்சியை மறுசீரமைப்பு செய்யும்போது பலரிடம் பொறுப்பு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அப்போது சிலரின் அதிகாரம் குறைவதாக எண்ணி வருத்தமடைந்து விலகுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.