ARTICLE AD BOX
IITயில் படித்து வரும் மாணவர் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே (IIT Bombay) வளாகத்தில் இன்று அதிகாலை 26 வயது மாணவர் ஒருவர் விடுதி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சின்ஹா என்ற அந்த மாணவர், ஐஐடி-பம்பாயில் அறிவியல் பிரிவில் பயின்று வந்தார். இந்தச் சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில் நடந்ததாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, மற்றொரு மாணவர் மொட்டை மாடியில் இருந்து இதைக் கண்டதாகவும், உடனடியாக ரோஹித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது கல்வித்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார். இத்தகைய சம்பவங்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு தேவை என்பதை வலியுறுத்துகின்றன.
இதற்கிடையில், மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 15 வழிகாட்டுதல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
