ARTICLE AD BOX
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கன்னட அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” தடைசெய்யப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் கமல்ஹாசன். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறியது. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கர்நாடகாவில் “தக் லைஃப்” படத்திற்கான தடை நீக்கப்படாது என ஊத்தரவிட்டது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து கமல்ஹாசன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு நீதிமன்றம் எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பி கமல்ஹாசன் மிரட்டப்படுவதை அனுமதிக்க முடியாது என கூறியது. மேலும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில், “தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்” என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் “தக் லைஃப்” திரைப்படம் விரைவில் கர்நாடகாவில் வெளிவரும் என தெரிய வருகிறது.