ARTICLE AD BOX
சீர்காழி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் நேற்று எதிர்பாராத பரபரப்பு நிலவியது.
அங்கு மகப்பேறு சிகிச்சை பெற வந்திருந்த 16 கர்ப்பிணி பெண்களும், 11 குழந்தை பெற்ற தாய்மார்களும் வழக்கம்போல் ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்டனர். ஆனால் அதைத்தொடர்ந்து பலருக்கும் திடீரென நடுக்கம், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை டாக்டரும், மகப்பேறு பிரிவு டாக்டர்களும் விரைந்து வந்து நிலைமையை பரிசோதித்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், பெரும்பாலானவர்களின் உடல்நிலை சீரானது. எனினும் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றி அனுப்பப்பட்டனர்.
மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த 27 பேரில் ஏற்பட்ட இந்த திடீர் பிரச்சனைக்குப் பின், அந்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊசி போடப்பட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
