ARTICLE AD BOX
தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் இன்று சென்னை கிண்டி அருகே சுட்டுப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை: பிரபல ரவுடியாக வலம் வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா என்பவரை, சென்னையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். கிண்டியில் பதுங்கியிருந்த இவரை போலீசார் தேடிச் சென்றபோது, போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐகோர்ட் மகாராஜா மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். அதோடு, வேளச்சேரி ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரைக் கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி மகாராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை முடிந்ததும், காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இவர், அண்மையில் நகைக்கடை அதிபரைக் கடத்திய வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

முன்னதாக, நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த நிலையில்தான், நேற்று கடலூர், இன்று சென்னை என அடுத்தடுத்து ரவுடிகள் மீது, போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?
மேலும், தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெறுவதாகவும், போலீசார் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.