ARTICLE AD BOX
அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன் என அதிமுக உடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “இந்தக் கேள்விக்கு நான் என்னுடைய பதிலை அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று பதில் சொல்வேன்.
எங்களுடைய கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்பதை அந்த நாளில் தெரிவிக்கிறேன். அதுவரை இது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம். ஆனால், நிச்சயமாக வெற்றி பெறும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைப்போம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக ஒரு ராஜ்ய சபா சீட்டை அதிமுகவிடம் கோரி வருவதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் மேடையில் பேச்சுக்கள் எழுந்தது.
ஆனால், தேமுதிகவின் இந்தக் கோரிக்கையை அதிமுக தலைமை முழுமையாக ஏற்கவில்லை என்பதால், இரண்டு கட்சிகளுடைய கூட்டணியில் சலசலப்பு ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவின. முன்னதாக இப்படியான, தகவல்கள் பரவியவுடன் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கூட்டணி தொடருமா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதையும் படிங்க: பாஜக Vs தவெக.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக? பரபரப்பில் அரசியல் களம்!
அப்போது, “கண்டிப்பாக எங்களுடைய கூட்டணி தொடரும், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு கடந்த மாதம் கூட்டணி குறித்த கேள்வி கேட்கும்போது, “2026 தேர்தல் கூட்டணி பற்றி இப்போது கணிப்பது சிரமம், எனவே தேர்தலுக்கு முன் முடிவு செய்வோம்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.