ARTICLE AD BOX
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவருக்கு தந்தை இல்லை. இதனால், தனது தாய் மற்றும் சகோதரர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், பொதுத்தேர்வுக்காக தயாராகி வந்த மாணவியை, உறவினர்கள் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் சிறுமி சோர்வுடன் காணப்பட்டுள்ளார். எனவே, கடந்த ஜனவரி 24 அன்று தனது சித்தி வீட்டிற்கு சிறுமி சென்று தங்கி இருக்கிறார். இந்த நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவரது சித்தப்பா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இதனை யாரிடமும் கூறினால் உன்னுடைய அம்மா, அண்ணனைக் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுமியை பாட்டி ஊரின் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு சிறுமியை 25 வயதான அவரது உறவுக்கான இளைஞர், சிறுமியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் சிறுமிக்கு அண்ணன் முறை ஆவார். மேலும், இவரும் தன்னைப் பற்றி வெளியே கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’
அது மட்டுமல்லாமல், சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வரும் 85 வயது முதியவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமையை சக தோழியிடம் சிறுமி கூறி இருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தோழி, ஆசிரியர் உதவியுடன் குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர், இந்தத் தகவலின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது சித்தப்பா, 25 வயது இளைஞர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், 85 வயது முதியவர் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருப்பதால், அவரைக் கைது செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.