ARTICLE AD BOX
இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட வேலு பிரபாகரன் உடல் நிலை மோசமானதின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்
சர்ச்சைக்கு பெயர் போன வேலு பிரபாகரன்
“இவர்கள் வித்தியாசமானவர்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் வேலு பிரபாகரன். அதன் பின் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்”, “புதிய ஆட்சி”, “அசுரன்”, “கடவுள்” போன்ற பல வித்தியாசமான படைப்புகளை இயக்கினார்.
1980களிலேயே “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்” என இரண்டு பாகங்களை எடுத்தவர். தமிழில் பல சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். பெரியாரின் கருத்துக்களில் அதிக ஈடுபாடுடையவராக இருந்ததால் இவரது திரைப்படங்களில் அதன் தாக்கம் அதிகளவில் இருக்கும். இதனால் பல வேளைகளில் சர்ச்சைகளும் கிளம்புவது உண்டு.

சில்க் ஸ்மிதாவின் காதலர்
வேலு பிரபாகரன் ஜெயதேவி என்ற பெண் இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றினர். ஆனால் இதற்கிடையில் வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் வேலு பிரபாகரனுக்கும் ஜெயதேவிக்கும் இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்தியது.
எனினும் ஒரு கட்டத்தில் வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவுமே பிரிந்தனர். தனது 60 ஆவது வயதில் தனது “காதல் கதை” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஷிர்லி தாஸ் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையை கிளப்பிய திருமணமாக பார்க்கப்பட்டது. இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதுமே சர்ச்சையுடன் பயணித்தவர்தான் வேலு பிரபாகரன்.

வேலு பிரபாகரன் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை மோசமானதன் காரணமாக மருத்துவமனை சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். இந்த நிலையில் வேலு பிரபாகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 68. வேலு பிரபாகரனின் மரணத்திற்கு சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
