ARTICLE AD BOX
2026 தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
சென்னை: நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தினம் ஒரு விவகாரத்தை எழுப்பி, அதிமுக தன்னை தொடர்ந்து எதிர்கட்சியாக காட்டிக் கொண்டிருக்கும் சூழலில், இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே, டெல்லியில் அதிமுகவிற்கான தனியாக கட்சி அலுவலகம் 10 கோடி ரூபாய் மதிப்பில் 4 மாடிகள் உடன் கட்டப்பட்டது. இதனை, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது நேரில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான திட்டமிடல்கள் ஏதும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் கூட்டணி குறித்து அறிவிப்போம் எனக் கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றுள்ளார்.
மேலும், டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை வலிமையான கூட்டணி இல்லாமல் இருக்கிறது. ஏனென்றால், ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் கூட்டணியில் இருந்த தேமுதிக கடுமையான அதிருப்தியில் இருக்கிறது.
இதையும் படிங்க: 9 மாத திருமண வாழ்க்கைக்கு விடை என்ன? கணவர் அதிர்ச்சி பதில்!
மேலும், தேர்தல் களத்தில் புதிய வரவாக, விஜயின் தமிழக வெற்றி கழகமும் களமிறங்குகிறது. இந்த நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரல் அதிமுகவில் இருந்தே வலுத்து வருகிறது என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது..