ARTICLE AD BOX
கன்னடத்து பைங்கிளி மறைந்தார்
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சரோதா தேவி மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார். இச்செய்தி சினிமாத்துறையினரை மட்டுமல்லாது இந்திய மக்கள் பலரையும் அதிர்ச்சிக்குளாக்கியது.
87 வயதான சரோஜா தேவி, இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பலருக்கும் ஜோடியாக நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூசன் போன்ற உயரிய விருதுகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர் இவர்.
பக்கபலமாக நின்ற கணவர்
சரோஜா தேவி 1967 ஆம் ஆண்டு ஹர்ஷா என்ற பொறியாளரை திருமணம் செய்துகொண்டார். அந்த காலகட்டம் சரோஜா தேவி சினிமாவில் பிசியாக வலம் வந்த காலகட்டம் ஆகும். பொதுவாக பல நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால் சரோஜா தேவி தனக்கு திருமணம் ஆன பின்பும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். இதற்கு பக்கபலமாக இருந்தவர் அவரது கணவரே.
இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரோஜா தேவி பகிர்ந்துகொண்டபோது, “எனது கணவர் என்னை சினிமாவில் நடிக்க அனுமதி கொடுத்துவிட்டார். 15 நாட்கள் ஷூட்டிங், மீதி 15 நாட்கள் வீடு என இயங்கிக்கொண்டிருந்தேன். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தவர். அவர் விசாலமான மனம் கொண்டவர். ஒரு விழாவில் பாலிவுட் நடிகர் திலிப் குமாரும் எனது கணவரும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது திலிப் குமார், ‘சரோஜா தேவி சினிமாவில் நடிப்பதை தடுத்துவிடாதீர்கள்’ என என் கணவரிடம் கூறினார். அதற்கு என் கணவர், ‘இல்லை நான் அவளை தடுக்க மாட்டேன். பெண்களை வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு காலத்தை தள்ளுவது எனக்கு பிடிக்காது. அவள் தாராளமாக சினிமாவில் நடிக்கலாம்’ என கூறினார். அதன் பின் நான் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டேன்” என அப்பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம். இது போல் அயராது பாடுபட்டதன் காரணமாகத்தான் இன்று அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் சரோஜா தேவி. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.