ARTICLE AD BOX
படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர்
பா ரஞ்சித் இயக்கி வரும் “வேட்டுவம்” திரைப்படத்தில் ஆர்யா, கெத்து தினேஷ், கலையரசன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டிணம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் ஸ்டண்ட் செய்யும் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியபோது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பா ரஞ்சித் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இந்த நிலையில் மோகன் ராஜ் உயிரிழந்ததை தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் பா ரஞ்சித் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். அதில், “திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது” என தெரிவித்துள்ள அவர்,

“சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம், தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரிழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது” எனவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.
இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” எனவும் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.
