ARTICLE AD BOX
ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞர் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் உத்திரகுமார் (35). இவர் பரமக்குடி, கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் உத்திரகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, சென்னை வேளச்சேரியில் 2024 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தொழிலதிபர் பழனிசாமி கொலை வழக்கில் உத்திரகுமார் கைதாகி சிறையில் இருந்தார். இதனிடையே, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ஏற்கனவே, பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் பிரச்னையில் முன்விரோதம் இருந்துள்ளது.
எனவே, பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக, உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் பார்வையிட்ட நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜயகாந்த்னா அது ஒருத்தர்தான்… அவர் இடத்தை ஒருத்தரும் : ராகவா லாரன்ஸ் அதிரடி!
இதனிடையே, கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்யக் கோரி, உத்திரகுமாரின் உறவினர்கள், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநேரம், உத்திரகுமார் கொலை தொடர்பாக பழனிச்சாமியின் உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.