ARTICLE AD BOX
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவரது மகன் பிரசன்னா (வயது 26 ) புகைப்பட நிபுணரான இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
இவரது நண்பர், ஹேம்நாத் (வயது 27). திருப்பூர் மாவட்டம் தானம் புதூரை சேர்ந்த ஹேம்நாத் அந்தப் பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று, பிரசன்னா, ஹேமந்த், மற்றும் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் சௌந்தரராஜன் ஆகியோர் மது அருந்தினர்.
அப்போது அவர்கள் சாப்பிட வைத்து இருந்த கோழி இறைச்சி காலி ஆகிவிட்டதால், பிரசன்னாவும் சௌந்தர்ராஜன் துடியலூர் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சிக்கன் வாங்க சென்று உள்ளனர்.
அப்போது அதிகாலை மணி 2 என்று கூறப்படுகிறது. ஓட்டல் அருகில் 5 பேர் கொண்ட கும்பல், பிரசன்னாவிடம் எதற்காக இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அப்போது சிக்கன் வேண்டுமென்று பிரசன்னா கூறி உள்ளார். உடனே அவர்கள் இந்த நேரத்தில் சிக்கன் உங்களுக்கு கேட்கிறதா ? என்று கூறி பிரசன்னாவை தாக்கி உள்ளனர்.
பிரசன்னாவிற்கு சரமாரியாக அடி – உதை விழுந்ததால் அதை பார்த்துக் கொண்டு இருந்த சௌந்தரராஜன் அங்கு இருந்து ஓடி சென்று ஹேமந்தை உதவிக்கு அழைத்து வந்து உள்ளார்.
உடனே ஹேமந்த், பிரசன்னாவை காப்பாற்ற சென்று உள்ளார். அப்போது ஹேமந்தத்தையும் அவர்கள் தாக்கினர். இதனால் அவர்கள் அங்கு இருந்து தப்பிச் செல்ல முயன்று உள்ளனர்.
அப்போது 5 பேரும் அவர்கள் வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதத்தால் ஹேமந்த் மற்றும் பிரசன்னாவை சரமாரியாக வெட்டியதில் இருவருக்கும் தலை, முகத்தாடை, கை கால்களில் வெட்டு விழுந்தது. அவர்கள் வலியால் அலறினர்.
உடனே அவர்கள் 5 பேரும் தப்பி ஓடி விட்டனர். கத்திக் குத்தில் காயம் அடைந்த பிரசன்னா ஹேம்நாத் ஆகியோர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பிரசன்னா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளர் ஹரி பிரசாத், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்திரகுமார், சின்ன செட்டிபாளையம் கிளி பிரவீன், நல்லம்பாளையம் செல்வம், ஆகிய 4 பேரை கைது செய்தார்.இந்த சம்பவம் கடந்த 5 ம் தேதி இரவு நடந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமந்த் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.இடைத்தொடர்ந்து இந்த வழக்கை சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.நண்பரை காப்பாற்ற சென்று ஹேமந்த் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
