ARTICLE AD BOX
பாஜகவுக்காக நாங்கள் ஒன்றும் தவம் இருக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளரான நடிகை கௌதமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “இந்த மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்தால்தான் விமோசனம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மாற்றம்தான் தேவை” எனக் கூறினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாங்கள் யாருக்காகவும் தவம் இருக்கவில்லை. அண்ணாமலை எங்கள் கட்சி பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுக – பாஜக: முன்னதாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக இரண்டும் தனித்தனியாக கூட்டணி வைத்து களம் கண்டன. இருப்பினும், இருதரப்பிலும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: பிரபல நடிகையின் கையை பிடித்த ரசிகர்.. பதிலுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்!
ஆனால், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறிவரும் நிலையில், அண்ணாமலையின் இப்பேச்சு மீண்டும் அரசியல் மேடையில் அதிர்ந்தது. இந்த நிலையில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாமலைக்கு பதிலளித்து, அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என மறைமுகமாக மீண்டும் கூறியுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
