ARTICLE AD BOX
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு இடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடனான கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பத்திரிகையாளர்கள் எங்களைப் பிரித்து பார்ப்பதிலேயே உள்ளனர். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். அதிமுகவை யாராலும் பிரிக்கவோ, உடைக்கவோ முடியாது. நான் முதலமைச்சரான நாள் முதலே அதிமுகவை உடைக்க திட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அதையெல்லாம் நாங்கள் உடைத்தெறிந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது. அப்படி முயற்சி செய்தவர்கள் மூக்கு உடைபட்டுப் போவார்கள்” எனத் தெரிவித்தார்.
என்ன நடந்தது? கடந்த பிப்ரவரியில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக, விவசாய அமைப்புகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அதற்கு அவர் காரணமும் கூறியிருந்தார்.
அதேபோல், கடந்த மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதோடு, நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் தனியே சந்தித்தார்.
இதையும் படிங்க: ரீ ரிலீஸ் பட்டியலில் யாரும் எதிர்பாரா படம்.. பக்கா Theater mode Release!
இந்த நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இருப்பினும், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையனும், ஓபிஎஸ் அணியினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.