ARTICLE AD BOX
சுமாரான வரவேற்பு
தெலுங்கின் முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஹரி ஹர வீர மல்லு பார்ட் 1”. இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் திரைப்படம் வெளிவருவதால் பலரும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை.
முகலாய மன்னர் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சத்தை கொண்டு உருவான இத்திரைப்படம் அரசியல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது வீடியோ ஒன்றில் இத்திரைப்படத்தை தனது தனி ஸ்டைலில் விமர்சனம் செய்துள்ளார்.

முரட்டு சங்கி இல்லை, முட்டாள் சங்கி?
“இந்த படத்தில் பவன் கல்யாண் நடித்ததற்கான நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அவர் ஒரு சங்கி என்பது ஊருக்கே தெரியும். ஆனால் அவர் ஒரு முரட்டு சங்கி என்று அவரது முதலாளியிடம் நிரூபிப்பதற்காகத்தான் இப்படி ஒரு படம் எடுத்துள்ளார்.
இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை வைத்து படம் எடுத்தால் அவரது முதலாளி மெச்சுவார் என்ற காரணத்திற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த படத்தில் இன்னொரு வேலை ஒன்றை பார்த்து வைத்திருக்கிறார்.
அதாவது இந்துக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று காட்டுவது போல் ஒரு காட்சியை எடுத்து வைத்திருக்கிறார். படத்தில் ஒரு சமஸ்தானத்து ராஜா ஒருவர் வருவார். அவர் ஒரு ஆண்ட பரம்பரை என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் பல மக்களை அடிமையாக வைத்துக்கொண்டு வைர சுரங்கம் தோண்ட வைக்கிறார். அந்த மக்களுக்கு கூலியாக என்ன கொடுக்கிறார் என்றால், பத்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கே இரண்டு மூட்டை அரிசிதான் கொடுக்கிறார். அப்படிப்பட்ட கொடுமையை செய்கிறார்.

அந்த அடிமை மக்கள் எந்த காரணத்தை கொண்டும் அந்த ராஜாவை தலை நிமிர்ந்து பார்க்கக்கூடாது. இதுதான் சட்டம். அந்த ராஜாவும் ஒரு இந்து, அந்த மக்களும் ஒரு இந்து. ஆனால் அவர்கள் இவரை நிமிர்ந்து பார்க்கக்கூடாது. குனிந்தே இருக்க வேண்டும்.
ஔரங்கசீப்பாவது ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன். அவன் இன்னொரு மதத்தை சேர்ந்தவனை கொடுமைப்படுத்தியது தவறுதான். ஆனால் இவர்களோ இந்துக்கள் என்று சொல்லிவிட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி என பேதம் பார்த்துவிட்டு இந்துக்களை இந்துக்களே கொடுமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கொடுமைக்குள்ளான மக்கள் இந்த மதத்தை விட்டு ஓடினால் போதும் என காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி மதத்தை விட்டு எப்படியாவது ஓடினால் போதும் என்று இருக்கும் மக்களை கத்தியை வைத்து பயமுறுத்திதான் மதமாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? அந்த மக்களுக்கு ஔரங்கசீப் ஒரு வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அந்த மாதிரிதான் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஔரங்கசீப் எவ்வளவோ நல்லவர் என்பது போலதான் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை அவரது முதலாளிக்கு போட்டுக்காட்டினால் படத்தை பார்த்துவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்துறேன் என்று சொல்லிவிட்டு நம்மளை நாமளே காட்டிக்கொடுக்கலாமாடா? சேம் சைடு கோல் போட்டு வச்சிருக்க, நீ ஒரு முரட்டு சங்கி என்று நிரூபிப்பதற்கு முட்டாள் சங்கி மாதிரி படத்தை எடுத்து வச்சிருக்க? என்று திட்டமாட்டாரா என்ன?” என்று ப்ளு சட்டை மாறன் தனது ஸ்டைலில் இத்திரைப்படத்தை விமர்சித்துள்ளார்.
