ARTICLE AD BOX
சூரியின் “மாமன்”
சூரி கதாநாயகனாக நடித்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த மக்கள் பலரும் பாஸிட்டிவான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்ப சென்டிமண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள், “இது என்னுடைய குடும்பத்தில் நடக்கும் கதை போல் உள்ளது” என பாராட்டுகின்றனராம். அந்தளவுக்கு இத்திரைப்படம் பல ரசிகர்களின் மனதோடு ஒன்றிப்போய் உள்ளது.
மாமன் சென்டிமண்ட்…
சூரியின் அக்காவுக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. அதன் பின் ஒரு கட்டத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையும் மாமன் சூரியும் பிரிவதே இல்லை. மிகவும் பாசமாக பழகுகின்றனர். ஒரு கட்டத்தில் சூரிக்கு திருமணமும் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த சிறுவனோ சூரிக்கும் அவரது மனைவிக்கும் நடுவில் வந்து படுத்துக்கொள்கிறான். அந்தளவுக்கு தனது தாய் மாமனின் மேல் பாசமாக இருக்கிறான். இந்த போக்கால் கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. அதே போல் சூரியின் அக்கா தனது மகனை மாமனிடம் இருந்து பிரிக்க முயல்கிறார். இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் “மாமன்” படத்தின் கதை.
எரிச்சலா வருது…
இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த வலைப்பேச்சு குழுவினர் தங்களது விமர்சனங்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். அதில், “படத்தில் சூரியின் அக்கா மகனாக நடித்த சிறுவன் அப்படத்தில் செய்யும் காரியங்களை பார்க்கும் போது பார்வையாளர்களாகிய நமக்கே எரிச்சலாக வருகிறது. அந்த சிறுவன் அழகாக நடித்திருக்கிறார்.
ஆனால் அவர் படுத்தும் பாடு எல்லாம் ஒரு கட்டத்தில் ஆடியன்ஸிற்கே சலிப்பையும் எரிச்சலையும் கொடுக்கிறது. ரொம்பவும் அட்ராசிட்டி செய்கிறார்” என கூறினர்.
மேலும் பேசிய அவர்கள், “கணவன் மனைவியின் தாம்பத்திய உறவிற்கே அந்த சிறுவன் இடையூறாக இருக்கிறான் என்றால் அவனை ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தூங்க வைப்பதில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. சில லாஜிக்கான கேள்விகள் எல்லாம் இந்த படத்தை பார்க்கும்போது வருவதுதான் இந்த படத்தின் மீது நமக்கிருக்கும் பிரச்சனை.
இது போன்ற அடம்பிடிக்கிற குழந்தைகளின் வீட்டில் வேறு குழந்தைகள் பிறக்காமல் இருக்கிறதா என்ன? பிறந்துகொண்டுதானே இருக்கிறது. அப்படி என்றால் ஒரு குழந்தையை சமாளிப்பது பற்றிய விஷயங்களுக்குள் போகாமல் கண்கட்டு வித்தை நடத்துகிறார்கள் பாருங்கள். அது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது” எனவும் விமர்சித்துள்ளனர்.