ARTICLE AD BOX
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில் “மாப்பிள்ளை”, “நினைத்தேன் வந்தாய்” போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளராக வலம் வரும் அல்லு அரவிந்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அனுமதிக்கப்பட்ட கடன்களை தவறாக பயன்படுத்தியதன் மூலம் ரூ.101.4 கோடி வங்கி மோசடி செய்துள்ளதாக யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா புகார் அளித்திருந்த நிலையில் அப்புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அல்லு அரவிந்தை விசாரணை செய்தது.
இப்புகார் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாது அல்லு அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.45 கோடி அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. அல்லு அரவிந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய செய்தி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.