ARTICLE AD BOX
கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது தற்பொழுது குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் மணிகண்டன் என்பவரிடம் நாசர் பாஷா (36) என்ற நபர், வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாசர் பாஷா, மணிகண்டன் இடம் ரூ. 5,000 கடன் கேட்டு உள்ளார். ஆனால் மணிகண்டன் கடன் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாசர் பாஷா, தனது நண்பர்களான பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா மற்றும் முகமது ஹர்சத் ஆகியோரிடம் இது குறித்து கூறி உள்ளார்.
இதையும் படியுங்க: சொன்னால் தானே செய்வீர்கள்.. பாஜக மாநிலத் தலைவர் கைது.. சவால் விடுத்த அண்ணாமலை!
இதை அடுத்து, மணிகண்டனுக்கு பாடம் புகட்ட நாசர் பாஷாவை தூண்டிய நண்பர்கள், அவருக்கு ரூ.200 கொடுத்து பெட்ரோல் குண்டு வீச கூறி உள்ளனர். மேலும், கடந்த 12.02.2025 அன்று டீபாட் பேக்கரியில் கேஷியருடன் வாக்குவாதம் செய்த நாசர் பாஷா, மறுநாள் காலை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள பழைய டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் மற்றும் டீபாட் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் திரியுடன் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பாட்டில்களுடன் வந்த போது, கோவை செல்வபுரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பழைய டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் மற்றும் டீபாட் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து நாசர் பாஷா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பைசல் ரகுமான், ஜாகிர் உசேன், இதயத்துல்லா மற்றும் முகமது ஹர்சத் ஆகியோர் மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டத்தின் பேரில், கோவை மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் குண்டர் தடுப்புச் சட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
