ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 50 வயது பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்க கூடிய 8 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும், 7 ஆம் வகுப்பு படிக்க கூடிய 2 மாணவிகளுக்கும் ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.
அதே போல புகார் தெரிவித்த 4 மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைதான பாலகிருஷ்ணன் ஏற்கனவே இரண்டு முறை சக ஆசிரியர்களை அவதூறாக பேசியது மற்றும் தாக்கியது தொடர்பாக இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
