ARTICLE AD BOX
பிக் பாஸ் நிகழ்ச்சியில் AI ரோபோ ஒன்று போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவருகிறது
அதிக வரவேற்பை பெற்ற டிவி ஷோ!
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ்தான். இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2006 ஆம் ஆண்டு ஹிந்தியில் பிக் பாஸ் முதல் சீசன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் மற்ற மொழி தொலைக்காட்சிகளிலும் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 19 ஆவது சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இதில் ஒரு AI ரோபோ போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.
AI ரோபோ என்னென்னவெல்லாம் செய்யும்?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோவின் பெயர் ஹபுபு. இந்த ரோபோ ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் மிக பிரபலமானது ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள ஐ எஃப் சி எம் என்கிற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த AI ரோபோ, மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உரையாடும் விதமாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படும் இந்த ரோபோ வீட்டு வேலைகள் அனைத்தும் செய்யுமாம். மேலும் பாடுவது, சமையல் செய்வது, அர்த்தமுள்ள உரையாடல்களை நிகழ்த்துவது ஆகியவற்றை திறம்பட செய்யுமாம். குறிப்பாக இந்த ஹபுபு ரோபோ ஆங்கிலம், ஹிந்தி உட்பட 7 மொழிகளை பேசக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
உலகளவில் ரியாலிட்டி ஷோவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோவை களமிறக்குவது இதுவே முதல் முறை என்பதால் ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எனினும் இந்த ரோபோ, மற்ற போட்டியாளர்களுடன் எவ்வாறு போட்டிபோடும்? சாதாரண மனிதனை விட அதிக திறன் கொண்ட இந்த ரோபோ, மற்ற போட்டியாளர்களுக்கு சமமாக எப்படி மதிக்கப்படும்? போன்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.