ARTICLE AD BOX
புதுமை இயக்குனர்
பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் ஜாதி சார்ந்த ஆதிக்கத்தையும் கேள்வி கேட்கும் விதமாக தனது படைப்புலகத்தை அமைத்துக்கொண்டவர் பா.ரஞ்சித்.

இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “தங்கலான்” திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. “தங்கலான்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கெத்து தினேஷ், ஆர்யா ஆகியோரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை பா.ரஞ்சித் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வங்கர் பலூ
1896 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்குள் அறிமுகமானவர் பல்வங்கர் பலூ. மும்பையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது அரசியல் போராளியாகவும் திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை பா.ரஞ்சித் திரைப்படமாக இயக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட “A Corner of a foreign field” என்ற புத்தகத்தை தழுவி படமாக்க பா.ரஞ்சித்திற்கு அழைப்பு வந்திருப்பதாக செய்திகள் தெரிய வருகின்றன. இப்புத்தகத்தை எழுதியவர் ராமச்சந்திர குஹா. இத்திரைப்படம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
