ARTICLE AD BOX
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த நடன அமைப்பாளரும் ஆவார். நடனம் தெரியாதவர்களுக்குக் கூட இவரது நடனத்தை பார்த்து கை கால்கள் தானாகவே நடனமாடும் என்று கூறும் அளவுக்கு புயல் போல் நடனமாடுபவர் பிரபுதேவா.

இவர் நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களின் நடன அமைப்பு மிகவும் தனித்துவமாக தெரியும். அந்தளவுக்கு நடனத்தின் மீது அசாத்திய உழைப்புமிக்கவராக வலம் வருபவர் பிரபுதேவா. இந்த நிலையில் பிரபுதேவாவை குறித்த ஒரு முக்கியமான தகவலை அவரிடம் பணிபுரிந்த நடன இயக்குனர் ரவி தேவ் சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பெண்டு கழண்டிடும்…
“பிரபுதேவாவை பொறுத்தவரை பெண்ட கழட்டிடுவார். பாடல் காட்சிகளை படமாக்கும்போது காலை 6 மணிக்கு படப்பிடிப்புத் தளத்திற்கு போனால் அவர் அங்கே பாடலை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருப்பார். 6 மணி முதல் 8 மணி வரை டான்ஸ் கம்போஸ் செய்வார். 8 மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு திரும்பவும் நுழைந்தால் பின்னி எடுத்துவிடுவார்.

ஒரு மணிக்கு மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் கிரிக்கெட் விளையாட கூப்பிடுவார். சில பேருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. அதன் பின் மறுபடியும் 6 மணி வரை போகும். 6 மணிக்கு பிரேக் விட்டால் அதன் பின் இரவு 8 மணி வரை போகும். அப்படியும் விடமாட்டார். அடுத்த நாளுக்காக ஒரு மணி நேரம் ஒத்திகை பார்க்கலாம் என்று ரிகர்சல் கொடுப்பார்.
காலையில் எழுந்திருக்கவே முடியாது. ஒரு 10 பேர் நம்மை போட்டு அமுக்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கும். ஆனால் அதே Movement-ஐ திரும்ப பிராக்டிஸ் செய்தால் உடல் தளர்வுக்கு வந்துவிடும். நடனமாட ஆட உடல் Warm Up ஆகிவிடம் என்பதால் டான்சர்கள் மிகவும் திடமாக இருப்பார்கள். பிரபுதேவாவிடம் யாராலும் ஓபி அடிக்க முடியாது. கண்டுபிடித்துவிடுவார்” என்று ரவி தேவ் அப்பேட்டியில் தான் பிரபுதேவாவிடம் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.