ARTICLE AD BOX
கன்னியாகுமரி மாவட்டம், பாலூர் காட்டுவிளையைச் சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள் (20), திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, கார்த்திக் மனைவியின் இல்லத்தில் தங்கி, அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.40 நாட்களுக்கு முன்பு பெனிட்டாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 9ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கார்த்திக், குழந்தை அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மனைவியிடம் விசாரித்தபோது, குழந்தை தவறி விழுந்ததாக பெனிட்டா கூறினார். உடனே குழந்தையை கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கார்த்திக் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை இயற்கையாக இறக்கவில்லை, மாறாக கொலை செய்யப்பட்டது என திடுக்கிடும் தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பெனிட்டா ஜெய அன்னாளை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெனிட்டா தனது 40 நாள் குழந்தையை தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார். “குழந்தை பிறந்த பிறகு, கணவர் என்மீது காட்டிய அன்பு குறைந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதற்கு குழந்தையே காரணம் என நினைத்து, குழந்தையின் வாயில் காகிதத்தை திணித்து கொன்றேன்,” என்று அவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் பெனிட்டாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
