ARTICLE AD BOX
சோனாக்சி சின்ஹா
பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோனாக்சி சின்ஹா. 2010 ஆம் ஆண்டு சல்மான் கானின் “டபாங்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். அதனை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த சோனாக்சி சின்ஹா, தமிழில் ரஜினிகாந்தின் “லிங்கா” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சோனாக்சி சின்ஹா தற்போது “நிகிதா ராய்” என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சோனாக்சி சின்ஹா, தனக்கு நேர்ந்த ஒரு அமானுஷ்ய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

படுக்கையறையில் பேய்!
“எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் எனக்கு நடந்த ஒரு அமானுஷ்ய சம்பவம் அந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. ஓரு நாள் நான் எனது வீட்டின் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென யாரோ என்னை தூக்கத்தில் இருந்து எழுப்புவது போல் இருந்தது. என் மீது யாரோ அமர்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. என்னால் எனது உடலை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. கண்களை திறக்க முடியவில்லை.
விடியும் வரை அப்படியேதான் இருந்தேன். அந்த சம்பவம் என்னை மிகவும் பயமுறுத்தியது. மறுநாள் இரவு படுக்கையறைக்குச் சென்றபோது, ‘நேற்று இரவு யார் வந்திருந்தாலும் சரி, தயவு செய்து மீண்டும் இது போல் செய்ய வேண்டாம்’ என கேட்டுக்கொண்டேன். அதன் பின் அது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. அது ஒரு நல்ல பேயாக இருக்கலாம்” என தனக்கு நடந்த அமானுஷ்ய சம்பவத்தை குறித்து சோனாக்சி சின்ஹா பகிர்ந்துகொண்டுள்ளார். இப்பேட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.