ARTICLE AD BOX
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி பணிக்காக வருகை தந்தார்.
காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்துள்ள அவர் முதன்முதலாக சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வருகை தந்து அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது நினைவு புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பார்வையிட்டார்.

விழாவில், 3846 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதோடு, புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஒன்றிய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை; அதிமுகவின் அடையாளம் அடிமைத்தனம்; ஆனால், திமுக அரசுதான் சமூக நீதிக்கான அரசு” என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகள் செல்லம் திட்டம், மற்றும் காலை உணவு திட்டம் ஆகியவற்றின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு அளித்த பெண்களுக்கு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, விவசாய த்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர்,சிவிஎம்பி. எழிலரசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
