ARTICLE AD BOX
விருதுநகர், சிவகாசியில் குடும்பத் தகராறில் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, அதே ஆலையில் அவருடன் பணியாற்றிய சிவகாசி, விஸ்வநத்தம் காமராஜர் காலனியைச் சேர்ந்த மாரீஸ்வரியை காதலித்துள்ளார்.
பின்னர், இருவரும் திருமணம் செய்துகொண்டு மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காளிதாசுக்கும், மாரீஸ்வரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது தாய் வீட்டிற்கு வந்த மாரீசுவரி, தனது தாயார் வீரமணியுடன், சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் சிவகாசிக்கு வந்த காளிதாஸ், தனது மனைவியிடம் சமாதானம் பேசி அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மாரீஸ்வரிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ், தனது மாமியார் வீரமணியை கத்தியால் குத்தி உள்ளார்.

பின்னர், அச்சத்தில் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும், இதில் படுகாயம் அடைந்த வீரமணி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சிவகாசியில் இருந்து மதுரை சென்ற பேருந்தில் காளிதாஸ் தப்பிச் சென்றது தெரிந்துள்ளது.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி விசாரணையில் தமன்னா, காஜல் அகர்வால்? புதுச்சேரியில் சிக்கியது எப்படி?
இதனையடுத்து, உடனடியாக அந்தப் பேருந்தை பெருங்குடி சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி, அதில் இருந்த காளிதாசை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
