ARTICLE AD BOX
47 வருடங்கள் கழித்து இணையும் ரஜினி-கமல்
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் தங்களது கெரியரின் தொடக்க காலகட்டத்தில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் தனி தனியே திரைப்படங்கள் நடிக்கத்தொடங்கி சமீப காலமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்கள். ரஜினி-கமல் ஆகிய இருவருக்கும் வணிக போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியால் இருவருமே சினிமாவில் வளர்ந்தனர்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி-கமல் ஆகியோர் மீண்டும் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வலம் வந்தது. ஆனால் இத்தகவல் உறுதிபடுத்தப்பட்ட தகவலாக இல்லை. இந்த நிலையில்தான் தற்போது ஒரு விருது விழாவில் இதனை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன்.

நாங்கள் இணைகிறோம்…
சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது ஒரு தரமான சம்பவமாக இருக்குமா என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஆடியன்ஸுக்கு பிடித்தால் நல்ல விஷயம்தான். அவர்களுக்கு சந்தோஷம் என்றால் நாங்கள் அதனை விரும்புவோம். இல்லை என்றால் மீண்டும் முயலுவோம்.
எங்களுக்குள்ளான போட்டியை உருவாக்கியது நீங்கள்தான். எங்களுக்குள்ளே எந்த போட்டியும் இல்லை. எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாங்கள் இணைகிறோம். இப்போதாவது இது நடக்கிறதே என நினைக்கிறோம்” என்று கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்துடன் தான் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார் கமல்ஹாசன். கிட்டத்தட்ட 47 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணைகின்றனர். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
