ARTICLE AD BOX
பட்ஜெட் இலச்சினை ரூ என மாற்றப்பட்டதால் சட்ட சிக்கலுக்கு வாய்ப்பில்லை என மத்திய, மாநில அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி, ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதன்படி, நாளை காலை 9.30 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில், 2025-2026ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்கள் ஆகியவற்றையும், 2025-2026ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு 2025-2026 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், “எல்லார்க்கும் எல்லாம் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட” எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளியிட்டுள்ள வீடியோவில், பட்ஜெட் இலச்சினை இடம்பெற்றுள்ளது. ஆனால், அதில் இந்தியா ரூபாய் குறியீடு ₹-க்குப் பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது பேசுபொருளான நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2025-2026ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றுகிறது. இது முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்ட ஒன்று.
இந்தச் சின்னத்தை வடிவமைத்தது, முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன் உதயகுமார்,. நீங்கள் (மு.க.ஸ்டாலின்) எவ்வளவு முட்டாள் ஆக முடியும்?” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரூபாய் நோட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் சட்ட சிக்கலுக்கு வாய்ப்பில்லை என உள்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினிக்கு மனைவியா நடிக்க வாங்க…பிரபல நடிகையிடம் மர்ம நபர் மோசடி.!
அதேநேரம், பட்ஜெட்டில் மட்டுமே தேவநாகரி எழுத்துருவுக்குப் பதில் ரூ என்ற எழுத்து பயன்படுத்தப்பட உள்ளது என்றும், அடையாளத்திற்காக மட்டுமே மாற்றம் செய்திருப்பதால் சட்ட சிக்கலுக்கு வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதல்வர் உபயோகித்து உள்ளார். இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
