ARTICLE AD BOX
கலவையான விமர்சனம்
சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தை எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருந்தார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் இத்திரைப்படத்தை குறித்து கூறிய கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்
“வீர தீர சூரன் வெற்றிப்படம் என்று சொன்னீர்கள் என்றால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நிச்சயமாக அது வெற்றிப்படமே கிடையாது. குட் பேட் அக்லி படத்தை ஒரு கணக்கிலாவது சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் வசூல் ஆவது ஆனது. ஆனால் வீர தீர சூரன் வசூல் ஆகவே இல்லை.

ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மிகப் பெரிய மாலையை கொண்டு சென்று விக்ரமிற்கு போடுகின்றனர். அவர் என்ன நினைத்துக்கொள்கிறார் என்றால், படம் வெற்றிப்படம் போல, ஆதலால் இதே போன்ற திரைப்படத்தில் நடிப்போம் என்று முடிவெடுத்து விடுகிறார். இதை முதலில் நிறுத்துங்கள் அய்யா” என்று திருப்பூர் சுப்ரமணியம் அப்பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.