ARTICLE AD BOX
அஜித்குமார், தனது திருமண வரவேற்பின் போது கார் ஓட்டுநர்களுக்காகச் செய்த நெகிழ்ச்சியான செயல் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: இது தொடர்பாக திரைத்துறையின் பிரபல மக்கள் தொடர்பாளர் (PRO) நிகில் முருகன் அளித்துள்ள ஒரு பேட்டியில், “அஜித் – ஷாலினி திருமண வரவேற்பில் PROவாக நான் இருந்தேன். தாஜ் கன்னிமேரா ஹோட்டலில் அந்த நிகழ்வு நடந்தது. பொதுவாக திருமண நிகழ்வுகளுக்கு வரும் விஐபிக்களின் கார் ஓட்டுனர்கள் ஹோட்டல் வாசலில் அவர்களை இறக்கவிட்டுவிட்டு, சாப்பிடாமல் பார்க்கிங் ஏரியாவில் காத்திருப்பார்கள்.
எனவே, விஐபிக்கள் காரில் இருந்து இறங்கும் இடத்தில் ஆட்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு பார்சல் உணவு மற்றும் தண்ணீர் தரலாமா என அஜித்திடம் கேட்டேன். உடனே அவர், இது நல்ல யோசனை, நிச்சயம் செய்யுங்கள் என்றார். ஆனால், இதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதி தராவிட்டால் என்ன செய்வது எனக் கேட்டேன்.
அதற்கு அடுத்த நொடியே, அப்படியென்றால் எந்த ஹோட்டல் அனுமதி தருகிறதோ அங்கு ரிசப்ஷனை மாற்றி விடலாம் எனக் கூறினார். ஆனால், அந்த ஹோட்டலே அதற்கான அனுமதியைத் தந்தது. எனவே, நாங்கள் சொன்னபடியே ஓட்டுனர்களுக்கு உணவு அளித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிகில் முருகன் அஜித்குமார் குறித்து பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். மேலும், அஜித்குமார் நடிப்பில் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வர உள்ளது. இந்தப் படத்தை அவரது தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
இதையும் படிங்க: மார்ச்சில் மாற்றமின்றி தங்கம் விலை.. வெள்ளி திடீர் உயர்வு!
ஜி.வி.பிரகாஷ் குமாரின் தெறிக்க விடும் பின்னணி இசையில் மாஸ் காட்சிகளுடன் கடந்த வாரம் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இறுதியாக அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா உள்ளிடோர் நடித்திருந்தனர். இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
